×

2வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் வழக்கறிஞர் குழந்தையுடன் தர்ணா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த வண்டிமேட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் இவர் தண்டலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாரியம்மாளுடன் பேச்சுவார்த்தையை தவிர்த்து வந்த ரமேஷ் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதை அறிந்த மாரியம்மாள் ரமேஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ரமேஷ், நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது எனக் கூறி மாரியம்மாளையும் அவரது மகனையும் சரமாரியாக அடித்து உதைத்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் ரமேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் அவர்மீது போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக வந்தார்.

இந்நிலையில் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலக வாயில் முன்பு திடீரென குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். மாரியம்மாள் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை என கூறி தொடர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் கொடுக்க வைத்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து அந்த பெண் அங்கிருந்து சென்றார்.

The post 2வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் வழக்கறிஞர் குழந்தையுடன் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Mariammal ,Vandimetukkai ,Periyapalayam ,Tiruvallur district ,Madras High Court ,Thandalam ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...